ஞாயிறு, 15 மே, 2011

எனது அறைகூவல்



என்
உடம்பைத் தின்ற
மனிதர்கள் தான் -இப்போது
என் பெண்மையைப் பற்றி
விமர்சிக்கிறார்கள் ...

என்னை
அங்குலம் அங்குலமாக
அனுபவித்தவர்கள் தான்
நான் வேசி என
விபரிக்கிறார்கள்.....

எனது
அதரங்களையும்
அந்தரங்கங்களையும் அணைத்து
போதையில் மிதந்தவர்கள் தான்
என்னை -நடத்தை கெட்டவள் என்று
நக்கலடிக்கிறார்கள் ...........

நானே சொர்க்கமென
நாளாந்தம் வந்து போனவர்கள்தான்
எனக்கு பலவிதமான
பட்டப் பெயர்களை
பரிசளித்து மகிழ்கிறார்கள்.......

என்னை அணைத்து
உடலை நுகர்ந்து
என் இளமையையும் வாழ்க்கையையும்
கொள்ளையடித்த கொள்ளைக்காரர்களே
இன்று-என்னை
கொல்லப்போவதாய்
கோஷமிடுகிறார்கள்.......................

அரசியல்வாதியிலிருந்து
அன்றாடங் காய்ச்சி வரை
ஆடையிழந்து என் முன்னே
நிர்வாணமாய் கிடந்தவர்கள்
என்னை துயில் உரிந்து
துரத்துவதற்கு திட்டமிடுகிறார்கள் .............

சமூகமே சமூகமே !!
உங்களில் ஒருவன்
ஒருத்தியோடு வாழ்பவன்
ஒருவர் வந்து சொல்லுங்கள்
உடனடியாய் நானும்
ஊரைவிட்டுப் போகிறேன்..........
   இராமசாமி ரமேஷ்
    அளம்பில்.

சனி, 14 மே, 2011

நம்பிக்கையில்லாப் பிரேரணை...


ஐநா சபையில்
அங்கம் வகிக்கும்
அதிபதிகளுக்கு வணக்கம்

சேவை செய்கிறோமென
கோஷமிடும் உங்களுக்கு
வன்னி மக்கள் அவலக்குரல்
வரவில்லையோ காதோரம்...?

பிரிவுகளை இணைக்கிறோமென
அறிக்கைவிடும் உங்களுக்கு
துண்டாடப்பட்டிருக்கும் வன்னிமக்கள்
துயர்வாழ்க்கை தெரியலையோ...??

போர்முடிந்து
பலநாட்கள் கடந்தும்
ஊர்போக முடியாமல்
முகாம்களே தஞ்சமென
ஊமைகளாய் வாழும் மாந்தர்
உயிர்வலிகள் புரியலையோ..??

காப்புவலயங்களில்
தமதுயிரைக் காவுகொடுத்து
எறிகணைகளின் பசிக்கு
தம்மையே இரைகொடுத்து
எஞ்சியவைகளோடு ஓடிவந்து
ஏமாறும் மக்கள் இடர்
ஒருபோதும் தெரியாதோ...??

தீர்க்கிறோம் தீர்க்கிறோமென
நீங்கள் தீர்த்தவைகளெல்லாம்
எங்கள் உயிர்களையும்
உரிமைகளையும் உடமைகளையும் தான்!
நீங்கள் தீர்க்கவந்த விடயங்கள்
நாட்டின் தேநீர்விருந்தோடு
கரைந்து போவது
நாம் காண்கின்ற சங்கதிதானே...!

ஆணைக்குழுக்களின்
அறிக்கைகளில்கூட
அசட்டைசெய்யும் உங்கள் குணம்
அடுத்த அழிவின்
ஆரம்பத்திற்கு அடிக்கல்லாவதை அறிவீரோ...??

பிழைகளைத் திருத்தும் நீதியே...!
இப்போது உபசாரத்திற்குள்
உண்மைகளைப் புதைப்பதால்
முட்கம்பிவேலிகள் ஆரவாரிக்கின்றன
இரத்தக்கறைகளுடன் எமைப்பார்த்து!!

அதிகாரம் கொண்ட அதிகாரிகளே!!
பாராமுகமாய் எங்களில் மட்டும்
பாரச்சிலுவையைச் சுமத்தாதீர்கள்

நாங்கள் சீரழிந்து
சிதைந்து கெட்டுப்போனவர்களல்ல!
வளமோடு வாழ்ந்து
வறுமையாக்கப்பட்டவர்கள்!!

இனியேனும் எம்மை
ஏமாற்றி நழுவாமல்
நாம் மலர உதவுங்கள்
எம் இடரைப் போக்குங்கள்...
கடுகதியில் நாம் எழுவோம்
வன்னி மண் வளமாகி
வந்திடும் இன்னுமொரு
வளர்ச்சி மிக்க தேசமாய்...!!

  இராமசாமி ரமேஷ்
    அளம்பில்.