என்
உடம்பைத் தின்ற
மனிதர்கள் தான் -இப்போது
என் பெண்மையைப் பற்றி
விமர்சிக்கிறார்கள் ...
என்னை
அங்குலம் அங்குலமாக
அனுபவித்தவர்கள் தான்
நான் வேசி என
விபரிக்கிறார்கள்.....
எனது
அதரங்களையும்
அந்தரங்கங்களையும் அணைத்து
போதையில் மிதந்தவர்கள் தான்
என்னை -நடத்தை கெட்டவள் என்று
நக்கலடிக்கிறார்கள் ...........
நானே சொர்க்கமென
நாளாந்தம் வந்து போனவர்கள்தான்
எனக்கு பலவிதமான
பட்டப் பெயர்களை
பரிசளித்து மகிழ்கிறார்கள்.......
என்னை அணைத்து
உடலை நுகர்ந்து
என் இளமையையும் வாழ்க்கையையும்
கொள்ளையடித்த கொள்ளைக்காரர்களே
இன்று-என்னை
கொல்லப்போவதாய்
கோஷமிடுகிறார்கள்.......................
அரசியல்வாதியிலிருந்து
அன்றாடங் காய்ச்சி வரை
ஆடையிழந்து என் முன்னே
நிர்வாணமாய் கிடந்தவர்கள்
என்னை துயில் உரிந்து
துரத்துவதற்கு திட்டமிடுகிறார்கள் .............
சமூகமே சமூகமே !!
உங்களில் ஒருவன்
ஒருத்தியோடு வாழ்பவன்
ஒருவர் வந்து சொல்லுங்கள்
உடனடியாய் நானும்
ஊரைவிட்டுப் போகிறேன்..........
இராமசாமி ரமேஷ்
அளம்பில்.
அளம்பில்.

