ஐநா சபையில்
அங்கம் வகிக்கும்
அதிபதிகளுக்கு வணக்கம்
சேவை செய்கிறோமென
கோஷமிடும் உங்களுக்கு
வன்னி மக்கள் அவலக்குரல்
வரவில்லையோ காதோரம்...?
பிரிவுகளை இணைக்கிறோமென
அறிக்கைவிடும் உங்களுக்கு
துண்டாடப்பட்டிருக்கும் வன்னிமக்கள்
துயர்வாழ்க்கை தெரியலையோ...??
போர்முடிந்து
பலநாட்கள் கடந்தும்
ஊர்போக முடியாமல்
முகாம்களே தஞ்சமென
ஊமைகளாய் வாழும் மாந்தர்
உயிர்வலிகள் புரியலையோ..??
காப்புவலயங்களில்
தமதுயிரைக் காவுகொடுத்து
எறிகணைகளின் பசிக்கு
தம்மையே இரைகொடுத்து
எஞ்சியவைகளோடு ஓடிவந்து
ஏமாறும் மக்கள் இடர்
ஒருபோதும் தெரியாதோ...??
தீர்க்கிறோம் தீர்க்கிறோமென
நீங்கள் தீர்த்தவைகளெல்லாம்
எங்கள் உயிர்களையும்
உரிமைகளையும் உடமைகளையும் தான்!
நீங்கள் தீர்க்கவந்த விடயங்கள்
நாட்டின் தேநீர்விருந்தோடு
கரைந்து போவது
நாம் காண்கின்ற சங்கதிதானே...!
ஆணைக்குழுக்களின்
அறிக்கைகளில்கூட
அசட்டைசெய்யும் உங்கள் குணம்
அடுத்த அழிவின்
ஆரம்பத்திற்கு அடிக்கல்லாவதை அறிவீரோ...??
பிழைகளைத் திருத்தும் நீதியே...!
இப்போது உபசாரத்திற்குள்
உண்மைகளைப் புதைப்பதால்
முட்கம்பிவேலிகள் ஆரவாரிக்கின்றன
இரத்தக்கறைகளுடன் எமைப்பார்த்து!!
அதிகாரம் கொண்ட அதிகாரிகளே!!
பாராமுகமாய் எங்களில் மட்டும்
பாரச்சிலுவையைச் சுமத்தாதீர்கள்
நாங்கள் சீரழிந்து
சிதைந்து கெட்டுப்போனவர்களல்ல!
வளமோடு வாழ்ந்து
வறுமையாக்கப்பட்டவர்கள்!!
இனியேனும் எம்மை
ஏமாற்றி நழுவாமல்
நாம் மலர உதவுங்கள்
எம் இடரைப் போக்குங்கள்...
கடுகதியில் நாம் எழுவோம்
வன்னி மண் வளமாகி
வந்திடும் இன்னுமொரு
வளர்ச்சி மிக்க தேசமாய்...!!
இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக