புதன், 21 நவம்பர், 2012

சூரியன் அறிவிப்பாளர் மேனகா துரைசிங்கம்


 
ஊடகத்துறைக்குள் இன்று மகளீரின் பங்களிப்பும் அவர்களின் சாதனையும் ஏராளம். இவ்வாறுதான் நம் சாதனைப் பெண்களில் பலர் இலத்திரனியல் ஊடகங்களில், அதுவும் குறிப்பாக வானொலிகளில் தமது வெற்றிகளை குவித்தும் பதித்தும் வருகிறார்கள். இவர்களில் இன்றும் தனது இனிய குரல் வளத்தினாலும் தமிழ் உச்சரிப்பினாலும் பல நேயர்களை தனக்கென உருவாக்கி வைத்துள்ள சூரியனின் அறிவிப்பாளர் மேனகா துரைசிங்கம் இந்தவார மித்திரனில் உங்களோடு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளப் போகிறார். 
நான் மேனகா துரைசிங்கம். பெரியபளை யாழ்ப்பாணத்தை சொந்த ஊராகக் கொண்ட மேனகா, ஆரம்ப கல்வியை பளை மத்திய கல்லூரியிலும் ,யாழ்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் அதன் பின் உயர் கல்வியை இரத்மலானை இந்து கல்லூரியிலும் கற்றுள்ளார். இசை நடனம் என பல புலமைகளை சுமந்துள்ள மேனகா இனி, எம் வாசகர்களுக்காக பகிர்ந்து கொண்டவை...
உங்களைப் பற்றி எம் வாசகர்களுக்கு கூறுங்கள்?
எனது குடும்பம் ஒரு அழகான சிறிய குடும்பம்,இன்பம் துன்பம் இரண்டையும் ஒருமித்து அனுபவிக்கும் ஓர் அன்பாலயம்,என்னுடைய அப்பா முனேஷ் துரைசிங்கம் தொழிலதிபராக இருந்தவர், கடந்த 2010 ம் ஆண்டு எங்களை விட்டு பிரிந்துவிட்டார்,உடலால் பிரிந்தாலும் மனதளவில் இன்றும் எங்களோடு வாழந்து கொண்டிருக்கின்றார் . அம்மா தவலக்ஸ்மி இல்லத்தரசி ,என் அக்கா ரேணுகா இப்போது ஆஸ்திரேலிய தொலைக்காட்சி ஊடகமொன்றில் கடமையாற்றுகின்றார்.  ஒரேயொரு செல்ல தங்கை வினோ உயர் கல்வியை மேற்கொண்டுகொண்டிருக்கிறார்  ,இவ்வாறான ஒரு அன்பு குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்தவளேதான் இந்த மேனகா. இவ்வளவுதான் என்னைப்பற்றி சொல்ல முடியும். இதைவிட சொல்ல வேறொன்றுமில்லை!

சரி! உங்களது ஊடகத்துறைப் பிரவேசம் எவ்வாறு நிகழ்ந்தது? 
ஊடக பயணத்தை பொறுத்தவரை என் முதல் அறிமுகம் 2004 ம் ஆண்டு   தீபம் தொலைகாட்சியில் தான்! அங்கு  செய்தி வாசிப்பாளராக கடமையாற்றினேன். பின்னர் சூரியன் வானொலியின் நிகழ்சி பணிப்பாளராக இருந்த நவநீதன்  அண்ணா எனக்கு சூரியனில் அறிவிப்பாளராகும்  வாய்ப்பை பெற்று தந்தார்.
எங்கள் வானொலியின்  சிரேஷ்ட  ஆலோசகராக இருக்கும் நடராஜா சிவம் அண்ணா என் அறிவிப்பு துறையின் வளர்சிக்கு அதிகமான  பங்களிப்பை நல்கியிருந்தார்கள். இவர்களின் ஊக்குவிப்பும் என் வெற்றிகளின் பின் நிற்பவை.    ஆரமபத்தில் என் குரல் அதிகமாக செய்திகள் மூலமாகத்தான் நேயர்கள் செவிகளை எட்டியது.பின்னர் என் முயற்சியும் பயிற்சியும் கைகொடுக்க நமது நிகழ்சி நிர்வாகம் சூரியன் வானொலியின் இசை சமர் நிகழ்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பை கொடுத்தது. 
இப்பொழுது சூரியனில் நீங்கள் தொகுத்தளிக்கும் நிகழ்ச்சிகள் பற்றி..? 
தற்போது இசை சமர் மற்றும் ஞாயிறு மாலை வேளையில் வானலையில் வலம்வரும் பொன் மாலை பொழுது ஆகிய நிகழ்சிகளை தொகுத்து வழங்குகிறேன்.
இசைசமர் என்னுடைய ஊடக வாழ்கையில் எனக்கான தனி அந்தஸ்தை பெற்று  தந்தது எனலாம். ஒரு வானொலி நிகழ்சியை இவ்வாறு வழங்கி நேயர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யலாம் என்பதை இலங்கையின் வானொலிகளில் முதன் முதலில் செய்து காட்டிய பெருமை நம்ம சூரியனுக்கும்  இந்த இசை சமர் நிகழ்ச்சிக்கும் கிடைத்திருக்கிறது.  சிறியவர் முதல் பெரியவர் வரை  வானலைக்கருகில் இருந்து நிகழ்சியின் மூன்று மணி நேரத்தையும் முழுவதுமாய் ரசித்து சிரித்து அனுபவிக்கும் நிகழ்சியாக படைப்பதற்கு நிகழ்ச்சி  பொறுப்பதிகாரி சந்துருவின் பங்களிப்பும் ,செயற்திறனும் அதிகமாகவே காணபடுகிறது. எனவே, இருவரின் முழு முயற்சியும் எங்கள் நவா அண்ணாவின் ஊக்குவிப்பாலும்தான் இசைச்சமர் இந்தளவு மக்கள் மத்தியில் முக்கியம்பெறக் காரணம்.  

தமிழை சரியாக, அழகாக உச்சரித்து செய்தி அறிக்கைகளை வாசிக்கும் உங்களது இரகசியம் என்னவோ?
தமிழ் உச்சரிப்பை சரியாக வழங்காவிடில், நாம் தமிழ் மக்களாய் இருந்தும் பயனில்லை. அத்தோடு, ஊடகவியலாளர்களுக்கு இது மிகவும் முக்கியம். தன தாய் மொழியில் நல்ல புலமை இருந்தால்தான் ஏனைய விடயங்களில் நாம் பிரகாசிக்கலாம். குரல்வளமும், உச்சரிப்பும்   இறைவன் கொடுத்த கொடை. என் பெற்றோர் ஆசிரியர் எனக்கு சிறு வயதில் கொடுத்த பயிற்சி தாய் மொழி மீதான அளவு கடந்த பற்று. செய்தியை வாசிக்கும் போது கேட்பவர்  மனதில் புரிய வைக்க,  முதலில் தெளிவாக நான் உள்வாங்கி கொண்டு ஒரு கதை போல சொல்ல வேண்டும் என்று நினைப்பேன். அதிகமாக வாசிப்பு பழக்கம் உண்டு! விவாதப் போட்டிகளில் பங்கு பற்றிய அனுபவமும் இதற்கு ஒரு காரணம். எனவே, இந்த துறைக்குள் நிலைக்க நான் செய்த பயிற்சிதான் இரகசியம் எனலாம். 


அதிகரித்துவரும் ஊடகங்களின் தோன்றல்கள், எந்தளவுக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை  தோற்றுவிக்கும்? 
ஒரு வகையில் நல்லது!! நிறைய ஊடகவியலாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். திறமைசாலிகள் பலர் இணங் காணப்படுவார்கள். தரமான படைப்புக்களை யார் வழங்குவது என்ற ஆரோக்கியமான போட்டி நம்மவர்க்ஜளுக்கு மத்தியில் நடக்கும். பல நல்ல பிரசவிப்புக்கள் இரசிகர்களுக்கும் மக்களுக்கும் கிடைக்கும். ஆனாலும், இன்னொரு வகையில் தீமை ஆகிவிடுகிறது. சமூக பார்வையில் பார்த்தால் வளர்ந்து வரும் சமூகத்தின் கல்வி அதிகமான பொழுது போக்கால் பாதிக்கப்படலாம். நம்மவர்களின் இயல்பு நிலையில் மாற்றம் ஏற்படக்கூடும். 
 இந்த வயதிலேயே பக்குவமாகப் பதிலளிக்கும் உங்களது ஒலிபரப்பாளர் வாழ்வில் மறக்க முடியாத சுவாரஸ்யமான சம்பவமொன்று..? 
நிகழ்ச்சியில் நேயர்களை சந்தோசப்படுத்த நானே ஒரு சில நகைச்சுவைகளை  சொல்ல தயாரித்து வைப்பது உண்டு. ஆனாலும் ஒரு முறை சொல்ல வந்ததை மறந்து விட்டேன். குறித்து வைத்த தாளையும் தொலைத்து விட்டேன். வானலையில் சொல்வதற்கு தயாரானபோது குறித்து வைத்த தாளைக் காணவில்லை. அம்மாடி!!  அப்புறம் என்ன பண்ண?  ஒரு மாதிரி சமயோசிதம் கைகொடுக்க நிகழ்ச்சியில் சமாளித்து விட்டேன். இப்படியான சம்பவங்கள் மறக்க முடியாத நினைவுகளாகும். 

ஊடகத்தில் எதிர்கால உங்கள் இலக்கு? 
பாரதி கண்ட புதுமை பெண்ணாக இருக்க வேண்டும் என்று நினைப்பவள் நான். பல சமூக பிரச்சினைகளை சமாளித்து பல தடைகள் தாண்டி ஆளுமையோடும் துணிவோடும் பல சாதனைகளை புரிந்த பெண் அறிவிப்பளர்களை போல் நானும் சாதிக்க முயல்கிறேன். இதற்கு என் குடும்பம் என் மேல் அக்கறை கொண்ட உள்ளங்கள்  பலம் கொடுக்கிறார்கள். என்னோடு பின் நிற்கிறார்கள். அத்தனை நெஞ்சங்களுக்கும் இந்நேரத்தில் நன்றிகள் கூறிக்கொள்கிறேன். 

ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் வானொலிக் கலைஞர்களும்  கடைப்பிடிக்க வேண்டுமென நீங்கள் நினைப்பது?
ஊடகம் என்பது ஒவ்வொரு தனி நபரையும் ஊடறுத்து செல்லும் சாதனம். மனிதனின் வாழ்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆயுதம். எனவே புகழ் மற்றும் பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த துறையை பயன்படுத்துவது ஒரு தவறு. தேடல் இல்லாமல் சாதிக்க முடியாது. தினம் தினம் நாம் எதையாவது சிந்தித்து செயற்படுத்த வேண்டும். நம்மைக் கடந்துபோகும் ஒவ்வொரு நொடியையும் ஏதாவது புது விடயத்தைப் பற்றி சிந்திக்கும் தருணங்களாக கடத்த வேண்டும். நமது முயற்சிகள் தான் நம் வாழ்க்கையை முன்னேற்ற உதவுகின்றன.  இந்த விடயத்தை எல்லோரும் மனதில் கொள்ளவேண்டும் இதுவே ஊடக தர்மம்.
   
நேர்காணல்-இராமசாமி ரமேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக