எனது வாழ்க்கைப் புத்தகத்தில்
பிறப்பு முதல்
வளமோடு வாழ்ந்து
ஏதுமற்ற ஏதிலிகளாய்
இடம்பெயர்ந்து ஓடியவரை
உன் மடிதானே புகலிடமாய்
என்னுடைய தாய் மண்ணே......!!
பசுமையாகக் கிடந்த
வளமான எனது தாய்மண்
வாடிப் போய்க்கிடக்கிறது
அபிவிருத்தி என்னும் வசந்தத்தை
எதிர்பார்க்கும் இலையுதிர்காலமாய்....
கிட்டியும் கிளித்தட்டும்
நாமாடிய திடல்களிளெல்லாம்
பச்சை உறைப்பை மூட்டைகளோடு
கறுப்பு உருவங்கள் முகாமிட்டு
எங்கள் சுதந்திரக் காற்றை
சுவீகரித்துக் கொண்டிருக்கின்றன....
சந்திகளில் சகாக்களோடு
நினைவுகளை மீட்டியபடி
நாம் களித்த பொழுதுகளை
சட்டித் தொப்பிகள்
சல்லாபப் பார்வைகளோடு
வெட்டி வீசி எறிந்துவிட்டன..............
வயல்கள் வரம்புகள்
தோப்புகள் துரவுகள் என
எங்கள் இளமை மலர்ந்த
இடங்களில் கூட..............
நாங்கள் இப்போது அந்நியர்களாக
அழைத்துப் போகப்படுகின்றோம்....
எங்கள் தேசத்தில்
ஆலயங்களுக்கு ஆண்டவனைத்
தேடித் போனால் கூட
தொடாத அவயங்களையும்
தொட்டுத் தடவிப் பார்க்கின்றார்கள்
தேசத் துரோகம் செய்துவிடுவோமென்று........
சமாதானம் மலர்ந்து
பூத்துச் சிரிப்பதாக பூரிக்கிறார்கள்
எங்களின் புன்னகையையும்
உரிமைகளையும் பறித்து
தமது அரையில் கட்டியபடி.......!!
இராமசாமி ரமேஷ்
அலம்பில்.

சகோ/அத்தனையும் வலிகள் நிறைந்த வரிகள்..
பதிலளிநீக்குஏக்கங்களோடே தினமும் வாழும் மனிதர்களாகிவிட்டோம்....
என்ன செய்வது....வெளியில் சொல்ல முடியாது
ஆதங்கம் நிறைந்த வலிகளை எமக்குள்ளே பகிர்ந்து ஆறுதலடைவோம்
அழகிய ஆதங்கம் நிறைந்த கவிதை......
!!!எனது பக்கமும் இணைந்துகொண்டால் தான் அடிக்கடி உங்க பக்கம் வர முடியும் சகோ.......
வாழ்த்துக்கள்...
தம்பி என்ன அடுத்த பதிவைக்காணவில்லை?
பதிலளிநீக்குஉங்கள் வானொலி அறிவுப்பு கேட்டேன்.நல்லாயிருக்கு.
சிறந்த படைப்பாளனாய் , இன்னும் இன்னும் வளர எனது வாழ்த்துக்கள்
கண்டிப்பாக அண்ணா....
பதிலளிநீக்குநன்றிகள் உங்களுக்கு தொடர்ந்தும் இணைந்திருப்போம்.