ஞாயிறு, 24 ஜூலை, 2011

சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்....


கனவுகள் திருடப்பட்டு
காலத்தின் கரங்களில்
கட்டாயப்படுத்தப்பட்டு
கைதியாக்கப்பட்டுப் போனேன்....
ஆற்றுவதற்கும் தேற்றுவதற்கும்
யாருமேயின்றி அனாதையாக நகர்கிறது
எனது பொழுதுகள்.....

சுகங்கள்

யாருடையதோ
சுரண்டலில்
அபகரிக்கப்பட்டதும்
நியங்கள் கானல்களாகி
எனக்காக எதுவுமேயின்றி
காணாமல் போயின
உரிமைகள் எனைவிட்டு வெகுதூரமாய்....

விரக்தியின் விளிம்பில்

விழித்துக் கொள்கிறேன்
தூங்குகின்ற பொழுதுகளில்கூட......!!

வண்ண வண்ணமாய் 

என் தேசத்தில் வருமென
நான் எதிர்பார்த்த தருணங்கள்
சுடுகாட்டில் கருக்கப்பட்ட
பூச்சரமாய்
இருட்டடிப்புச் செய்யப்பட்டு
இரும்புக் கரங்களுக்குள்
இறுக்கப்படுகின்றன...........

வயது வந்துவிட்டதால்

வாலிபமே என் வாழ்க்கைக்கு
வலியாகிப் போனது.....
தங்கக் கூண்டில்
தடுமாறும் பறவையாக
வசதிகள் கொட்டிக் கிடந்தும்
வெளி வாழ்க்கைக்கு
வழி பார்க்கின்ற
என் விழிகளின் கனவுகளை
யார்தான் புரிந்துகொள்வார்களோ....??

                                                   இராமசாமி ரமேஷ்,
                                                        அளம்பில்.
 



2 கருத்துகள்: