வியாழன், 15 மார்ச், 2012

வருவீரோ எம்மைத் தேடி...


தேயிலைச் செடிகளோடு
போராடி
எங்கள் வியர்வைத்துளிகளால்
உங்கள் வாழ்வாதாரத்தை நிரப்பினோம்....

அடிப்படையாய்
எமக்கேதுவும் இல்லாவிட்டாலும்
வாழ்க்கைதந்த நாடு என்று
வலிசுமந்தோம் தொழிலாளிகளாய்....

பொழுதெல்லாம் பாடுபட்டு
இரவதிலே ஓய்வெடுக்க
ஒத்தத்துண்டு நிலமில்ல
உரிமை சொல்ல வீடில்ல

பள்ளியில்ல பாடமில்ல
புள்ளைகளின் கல்வியில்ல
வீதியில்ல வேலையில்ல
வேற இங்க ஒண்ணுமில்ல

ஓட்டுக் கேட்க கூட்டம் வரும்
காதுகுளிர கதைகள் சொல்லும்
வாக்குப் பெற்று வந்ததுமே
சொன்ன கதை காற்றில் போகும்

பசுமைக்குள்ள நாமிருந்து
வெறுமைதானே எங்க நிலை
உரிமை கேட்டு பேசினாலும்
எதுவும் வந்து சேர்வதில்லை

பேசிப் பாத்தோம் அழுதும் பார்த்தோம்
பெரிய இடத்தில் போயும் கேட்டோம்
போங்க நாங்க வாரோம் என்றீர்
இன்னும் அந்த வருகை இல்ல

இன்னும் நாங்கள் காத்திருக்கோம்
வருகைக்காய் பார்த்திருக்கோம்
எங்க தேசம் வாருங்கையா...
துன்பந்தனை தீருங்கையா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக