அண்ணன் தம்பியாய்
கூடியிருந்த இவர்களின்
இருப்பை அழித்துத் துரத்தி
அகதிகளாக்கப்பட்டார்கள் தூரதேசங்களில்...!
பாசத்தையும் பண்பாடுகளையும்
பறைசாற்றிய இவர்களுடைய
அழகிய வாழ்தலுக்கு
இனத்தை பிரித்துக்காட்டி
இரண்டாக்கினார்கள் தமிழையே!!
மரணம் வரைக்கும் மண்ணோடு
என்றிருந்த இவர்களை
எங்கோ தொலைவுக்கு அகதிகளாக்கி
இன்னும் சபித்துக் கொள்கிறது மனசு
இறைவன் இப்போதெல்லாம்
அருகிலேயே இருக்கிறான் போலும்!
இவர்களுக்கு அவர்கள் செய்த அநியாயத்தால்
நேற்றைகளில் நாங்களும் ...
உறவுகளை யுத்தப்பேய்க்கு தின்னக் கொடுத்துவிட்டு
அகதிகாளாகியது நினைவிருக்கிறது...
முல்லையில்...
முஸ்தபாவும் முருகையாவும்
கனகம்மாவும் கதீஜாவும்
இர்பானும் இந்துஜாவும் இப்போதெல்லாம்
நட்பைப் போர்த்தியபடி வலம்வருவது
எத்தனை அழகு தெரியுமா?
பள்ளியின் அதான் ஓசையும்
கோயிலின் கண்டாமணியும்
அந்தோனியார் ஜெப வாசமும்
ஊரையே உலாவுகின்றபோது
இதையா இல்லாமல் செய்தார்களென்று
வினவுகிறது உள்மனசு...!
மனிதத்தை வரித்துக் கொண்டிருந்த
இவர்களையும் எங்களையும்
எதிரிகளாக்கி மோதவிட்டு
வேடிக்கை பார்த்தவர்கள்
இற்றைகளில் எங்கென்றே தெரியவில்லை....
இது இயற்கையின் தீர்ப்புபோல!
ஹிஜ்ராபுரத்து சலீம் நானாவின்
கொத்துரொட்டியும் ..
ரிம்ஸா அம்மாவின் வட்டிலப்பமும்
அடிபட்டு உண்ணும் நாட்கள்....
நிறையக் கிடைக்க வேண்டுகிறேன்
-இராமசாமி ரமேஷ்-


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக