புதன், 23 மே, 2012

வெறுக்கப்படாத என் விருப்பங்கள்..


அம்மா மடி...
அப்பாவின் விரல்பிடித்த நடை...
அண்ணா அக்காவோடான சண்டை...
பாட்டி சொன்ன கதை...
வண்டில் உருட்டும் வெளி...
ஒளித்துப் பிடித்தாடும் பொட்டல் காடு...
குத்துக்கரணம் செய்யும் குளம்...
பட்டம்விடும் வானம்...
பள்ளிக்குப் போகும் குச்சொழுங்கை...
பயமில்லாத இரவு...
படித்தபடி தூங்கிய குப்பி விளக்கு...
அம்மாவின் சேலைப் போர்வை...
தலைகோதும் ஆசான்...
எப்போதும் நட்போடு சுற்றும் நண்பர்கூட்டம்...
மரத்தடி வகுப்பறை...
கிரவல் வீதிப் பயணம்...
நினைக்க வாயூறும் நாவல் இலந்தை...
பிள்ளையார்கோயில் பொங்கல்...
பெத்தம்மா ஆச்சியின் குழல்பிட்டு..
ராசப்பா  கடை முட்டாசு...
காத்தான் கூத்து...
கரகம் காவடி கும்மி...
தடையில்லா தேசம்...
இத்தனையும் புதைந்து விட்டன
இயந்திரமாய் நகரும்
எனது நகரத்து வாழ்க்கையில் ...
மாடிவீட்டிலும் பஞ்சு மெத்தைக்குள்ளும்
வந்திடப் போவதில்லை
எங்கள் கிராமத்து சுகங்கள்...
இராமசாமி ரமேஷ்..
அளம்பில்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக